பருவமழை பொய்த்துப் போனாலும், நம்பிக்கை நாற்றங்கால்களோடு காத்திருக்கும்
விவசாயிகளால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுபோல சமூக
அநீதிகளுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளுக்கு எத்தனையோ தடங்கல்களும்
எதிர்ப்புகளும் தலைதூக்கியபோதும் சோர்ந்துவிடாமல் நகர்ந்துகொண்டே
இருக்கிறார் சமூகப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். அடக்குமுறைகளுக்கும்
அதிகாரத்துக்கும் எதிராகப் பலர் பல வகைகளில் தங்கள் குரலைப் பதிவு செய்ய,
உரிமைகளைக்கூட அகிம்சையின் மொழியில் கேட்டவர் இவர்!
இன்றைய காலகட்டத்தில் ஓரளவு வசதிகளும் வாய்ப்புகளும் சுதந்திரமும்
உருவாகியுள்ள சூழலில், ஒரு பெண், தனது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்வது
அத்தனை பெரிய விஷயம் இல்லை. ஆனால் இந்தியா ஒரு இருண்ட காலத்தில்
இருந்தபோது, இவர் தன் சேவையைத் துவக்கினார். அடுப்பங்கரைக்கு வெளியே ஒரு
உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட வாய்ப்பின்றி சமையலறை
கைதிகளாக மட்டுமே பெண்கள் வளர்க்கப்பட்ட காலத்தில், தேசிய விடுதலை
இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் கிருஷ்ணம்மாள்.
தாயிடம் பயின்ற தைரியம்
வெளியுலகின் பார்வைக்கு அவ்வளவாக தட்டுப்படாத தமிழகத்தின் தென்கோடி
கிராமமான அய்யங்கோட்டையில் 1926இல் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவர் பிறந்த
சமூகமும் தீண்டத்தகாதோர் என்ற முத்திரையோடு ஒதுக்கப்பட்டிருந்தது.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பதற்கான எந்தவித நடைமுறை
சாத்தியக்கூறுகளும் இல்லாத இவரது பிறப்பை திசைமாற்றிய உந்துசக்தி இவரது
தாய் நாகம்மாள். குடிகாரக் கணவனிடம் உதையும் வதையும் பட்டு,
முப்பத்திரெண்டு வயதில் விதவைக்கோலம் பூண்டாலும், மனம் தளராமல் தான் பெற்ற
குழந்தைகளை வளர்ப்பதொன்றே லட்சியமாக இருந்துள்ளது. ஏட்டுக் கல்வி சொல்லித்
தராத உறுதியையும் துணிச்சலையும் தன் தாயிடம் இருந்து கற்றுக்கொண்டார்
கிருஷ்ணம்மாள். படித்த, மேல்தட்டு பெண்களின் ஏகபோக சொத்தான கல்வி, தனக்கும்
கைவரப்பெற வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்ததன் விளைவு, இவரை
கல்லூரிப் படிப்பு வரை கொண்டு சென்றது.
கல்லூரி படிப்பு தந்த பக்குவமும் தைரியமும் இவருக்குள் இருந்த
உத்வேகத்துக்கு உரம் சேர்க்க, தலித் பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல்
கொடுப்பது, தன்னைச் சுற்றி நடக்கிற சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது
போன்றவற்றைத் தன் முழுநேரப் பணியாகத் தேர்ந்தெடுத்தார். காந்தியடிகளின்
கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு சர்வோதய இயக்கத்தில் இணைந்தார் கிருஷ்ணம்மாள்.
கருத்தொருமித்த காதலர்கள்
அங்குதான் தன் காதல் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதனைச் சந்தித்தார். பொதுநல
சேவையில் கிருஷ்ணம்மாளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை இவர். மிகப்
பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தியடிகளுடன் இணைந்து
பணியாற்றத் தடையாக இருந்ததால், தனது கல்லூரிப் படிப்பைத் துறந்துவிட்டு
அறவழியைத் தன் வழியாக ஏற்றுக்கொண்டவர். இருவரது எண்ணமும் செயலும் ஒன்றாக
இருக்க, அந்தப் போராட்டக் களத்திலும் பூத்தது காதல் பூ.
காதலைக்கூட பொதுநல நோக்கோடு கட்டமைத்துக்கொண்ட உன்னதக் காதலர்கள்
இவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தேசத்தின் விடுதலையை தங்கள்
திருமணத்துக்கான இலக்காக வைத்திருந்த காதலர்கள் இவர்கள்! இந்தியா
சுயராஜ்ஜியம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வோம் என்ற தங்களது
கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, அதைச் செயல்படுத்தியும் காட்டினார்கள்.
நில மீட்பு போராட்டம்
சுந்ததிர இந்தியாவில் 1950ஆம் ஆண்டு இவர்களது திருமணம் முடிந்த கையோடு,
வினோபா பாவேயின் ‘பூமிதான’ இயக்கத்தில் பணியாற்ற வட இந்தியாவுக்குச்
சென்றார் ஜெகந்நாதன். அவர் திரும்பி வருவதற்குள் தனது ஆசிரியர் பயிற்சி
படிப்பை முடித்திருந்தார் கிருஷ்ணம்மாள். பிறகு இருவருமாகச் சேர்ந்து
தமிழகத்தில் ‘பூமிதான’ இயக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்
காட்டினார்கள். இதற்காக பலமுறை சிறை சென்று மீண்டபோதும், ஏழைகளின்
புன்னகைக்காக அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். தமிழகம்
முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கிட்டத்தட்ட 1.4 கோடி ஏக்கர் நிலங்களைப்
பல லட்சம் மக்களுக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்
லாஃப்டி உதயம்
இவர்களது இந்தத் தொடர் பயணத்தைத் திசைமாற்றிப் போட்டது ஒரு துயர சம்பவம்.
1968இல் நாகப்படினம் மாவட்டம் கீழவெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு
கேட்ட தலித் மக்கள் 44 பேரை அவர்கள் வாழ்ந்த குடிசைக்குள் சிறை வைத்து
பண்ணையார்களே தீவைத்தனர். உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருந்தால்தான்
இதுபோன்ற அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என நினைத்து,
‘உழுபவனின் நில உரிமை இயக்கம்’ எனப்படுகிற ‘லாஃப்டி’ அமைப்பை இருவரும்
உருவாக்கினார்கள். இந்த இயக்கத்தின் சார்பில் நிலங்களை மீட்டு, அதை
உழவர்களின் பெயருக்கே பதிவு செய்துகொடுத்தார்கள். விவசாயம் இல்லாத
காலங்களிலும், விவசாயிகள் தங்கள் வருமானத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக
இயக்கம் சார்பில் தச்சு வேலை, தையல் வேலை, பாய் பின்னுதல், கயிறு
திரித்தல், கட்டுமானப் பணிகள் என பலவற்றுக்கு பயிற்சியும் வேலைவாய்ப்பும்
ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ‘லாஃப்டி’ இயக்கத்தின் வெற்றியைப் பார்த்து
அரசாங்கமே அந்த இயக்கத்தின் வழியில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுக்கும்
திட்டத்தை உருவாக்கியது.
இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம்
மனிதனை மட்டுமல்ல, இயற்கையைச் சுரண்டுவதும் மிகப்பெரும் குற்றம்தான்
என்பதில் உறுதியாக இருந்தார் கிருஷ்ணம்மாள். இறால் பண்ணைகளுக்காக
விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார். அதற்காக
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு
பயணம் செய்து தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார்கள்.
தொடரும் சேவை
2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த கணவரின் மறைவுக்குப் பிறகும்
தொடர்ந்து பொதுச்சேவையில் இருக்கிறார் கிருஷ்ணம்மாள். தலித்துகள்,
பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அயராமல் பணியாற்றி வருகிறார். பத்ம,
மாற்று நோபல் பரிசு என விருதுகளை வாங்கி யிருப்பதோடு, அமைதிக்கான நோபல்
பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப் பட்டது. ஆனால் இந்த விருதுகளைவிட
ஏழைகளின் கண்களின் பளிச்சிடுகிற மகிழ்ச்சியைத்தான் பெரிய விருதாக நினைக்
கிறார் கிருஷ்ணம்மாள். தன் வாழ்க்கை யையே பிறருக்காக அர்ப்பணித்துக்கொண்ட
பக்குவப்பட்ட இதயத்தால் அப்படித்தானே நினைக்க முடியும்