Thursday, May 1, 2014

நவீன சிந்துபாத்


மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். பெயர் அலீ மனிக்ஃபான் .
ஒடிசலான குச்சி போன்ற உடல்வாகு. புன்னகையுடன் சன்னமான குரலில் மென்தமிழில் உரையாடத் தொடங்கினார்.
பல அடி தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என்று கேட்டேன். மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீரைத் தேடிப் பயணிக்கக்கூடியவை. சற்றுத் தொலைவில் நீரூற்றும்போது, அதைத் தேடி அந்த வேர்கள் பரவும். அதனால் மரம் வலிமையாக நிலைகொள்ளும். ஆனால், மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகிறோம் என்றார்.
வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது கிழவனேரி கிராமம். வறண்டு பரந்த நிலத்தின் நடுவே நிற்கிறது அலீ மனிக்ஃபானின் குடில்.
அருகாமையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உள்ளூரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான் வீடு கட்ட வேண்டும் எனக் கூறும் அலீ மனிக்ஃபான், அதற்கேற்பக் குடிசையமைத்து வாழ்ந்துவந்தார்.
முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான் என்ற முழு பெயரைக் கொண்ட அலீ மனிக்ஃபான் பிறந்து வளர்ந்த இடம் மினிக்காய் தீவு. எட்டாம் வகுப்புடன் இவருடைய கல்வி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடல், மலை, ஆறு, குளம், குட்டைகள் இவருடைய ஆசான்களாக மாறிப் போதித்தன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத் தில் உள்ள மத்திய அரசின் கடல்சார் மீன்வள ஆய்வு கழகத்தில் (CMFRI) 20 ஆண்டுகள் அருங்காட்சியக உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் அலீ மனிக்ஃபான்.
புதுமைக்கும் தேடலுக்கும் அந்தப் பணியில் இனிமேலும் வாய்ப்பில்லை என்றான பிறகு, விருப்ப ஓய்வு பெற்றார்.
இயற்கை வேளாண்மை
அப்போது இயற்கை வேளாண்மை குறித்த தனது கனவுகளை நனவாக்க நினைத்து, வள்ளியூர் அருகே 15 ஏக்கர் நிலத்தை வாங்கி ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் DO NOTHING FARM என்ற இயற்கை வேளாண் பண்ணையை அமைத்தார். மனிதனின் இடையூறு இல்லாமல் மரங்களும் செடிகொடிகளும் எப்படி வளர்கின்றன என்பதைச் சோதித்து அறிவதற்காகவே, அதை அமைத்ததாக மனிக்ஃபான் கூறுகின்றார்.
அத்துடன் மொட்டைப் பனையில் காற்றாடிகளைப் பிணைத்துக் கார் பேட்டரி வாயிலாகத் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வெட்ட வெளியிலிருந்து கறந்து கொண்டி ருந்தார்.
ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள்
ஆடு தின்னும் அனைத்து இலை தழைகளையும் மனிதனும் சாப்பிடலாம் என்று கூறும் இவர், சமைப்பதே இல்லை. இலைதழைகள்தான் இவருடைய அன்றாட உணவு. நோய் வந்தால் மருந்து உட்கொள்வதில்லை. நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார். கால் நடைகளுக்கு நோய் வந்தால் அவை உண்ண மறுக்கின்றன . நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்கத் தொடங்குகின்றன என விளக்கினார்.
இப்படிப் பணியிலி ருந்து விலகிய பிறகு, தற்சார்பு வாழ்வியலைத் தனது வாழ்நாள் பணி திட்டமாகக்கொண்டு இயங்கும் அலீ மனிக்ஃபானின் செயல் களமாக விளங்குவது அவரது சொந்த உடலும் குடும்பமும்தான்.
நவ சிந்துபாத்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துபாத் என்ற கடலோடி கதை மாந்தன் பயணித்த கற்பனைத் தடங்களுக்கு உயிர் கொடுக்க எண்ணினார் அயர்லாந்தைச் சார்ந்த கள ஆய்வாளரும் எழுத்தாளருமான டிம் செவரின் (TIM SEVERIN ).
சிந்துபாத் பயணித்த மஸ்கட்டிலிருந்து சீனத்தின் கேன்டன் (CANTON) துறைமுகம் வரையிலான 9,655 கிலோமீட்டர் கடல் பாதையில் தன் குழுவினருடன் டிம் செவரின் பயணித்துள்ளார். இந்தப் பயணப் பட்டறிவை The Sindbad Voyage என்ற பயணக் குறிப்பு நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடல் பயணத்துக்கான ‘சோஹர்’ (SOHAR) என்ற பெயருடைய 27 மீட்டர் நீளமுள்ள மரக்கலத்தை 11 மாதக் கால உழைப்பில் தென்னை மட்டை, கயிறு, அயினி மரம் என்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைத்து உருவாக்கியது அலீ மனிக்ஃபான் தலைமையிலான குழுதான். கப்பல் கட்டுதல் அலீ மனிக்ஃபானின் குடும்பத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் தொழில்.
இந்த மரக்கலம் 16-ம் நூற்றாண்டின் போர்த்துகீசிய ஆவணத்தில் காணக் கிடைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் பண்டைய திவேஹி தொழில்நுட்பத்தின்படி உருவாக்கப்பட்டது. இந்தச் சோஹர் மரக்கலம், தற்போது மஸ்கட்டில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தில் உள்ளது.
கௌரவம் பெற்ற பெயர்
கடலின் மகனான அலீ மனிக்ஃபான் பல அரிய வகை மீன் இனங்களைச் சேகரித்துள்ளார். அவற்றின் உள்ளூர்ப் பெயர்களை அடையாளம் காணும் பணியில் மண்டபத்தில் உள்ள CMFRIயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.ஜோன்ஸுக்கு உதவியுள்ளார்.
அப்போது இளைஞனாக இருந்த அலீ மனிக்ஃபானின் திறமையைக் கண்டு வியந்த ஜோன்ஸ், மனிக்ஃபான் கண்டுபிடித்த புதிய வகை மீன் ஒன்றுக்கு அவருடைய நினைவாக abu def def manikfani என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.
அத்துடன் மண்டபம் கடல் சார் ஆய்வு நிலையத்தில் அருங்காட்சியக உதவியாளராகவும் பணியில் சேர்த்துக்கொண்டார். அதன் பிறகு தனக்கு விருப்பமான கடலையும் மீனையும் போல, தனது தேடலைப் பரந்து விரிந்ததாக ஆக்கிக்கொண்டார் மனிக்ஃபான்.
இயற்கை தந்த கொடை
கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில்நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, நிலப்பரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றில் அறிமுகமும் ஆழமும் மனிக்ஃபானுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அது இயற்கை அளித்த கொடை என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்?
இயற்கையை உறவாடுபவர்களுக்கு அது பன்மடங்காகத் திரும்பக் கையளிக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தது என்பதற்கு அலீ மனிக்ஃபானின் வாழ்க்கை ஒரு சாட்சி.
அலீ மனிக்ஃபானின் வாழ்க்கையை The man in million என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் மஜித் அழிக்கோடு ஆவணப்படமாக இயக்கியுள்ளார்.
நானும் நண்பர்களும் வள்ளியூரில் உள்ள அவரது இயற்கை பண்ணையில் கண்ட காட்சிகள் எல்லாம் 1993-ம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை. இன்று அவர் கட்டிய வீடு இல்லை. அலீ மனிக்ஃபான் கேரளத்துக்குச் சென்றுவிட்டார்.
எல்லாமே பரிசோதனை
“நீங்கள் நடந்து வந்த பாதையில், ஏன் பிறரைப் பயிற்றுவிக்கவில்லை?” என்று கேட்டபோது, “நான் செய்துகொண்டிருக்கும் விஷயங்களை யாரையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய விரும்பவில்லை. இது ஒரு பரிசோதனை மட்டுமே” என்றார்.
அன்றாடம் விரியும் மலரைப்போல, காலைக் கதிரவனைப்போல வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் நிறைந்த அழகுடனும் நம்பிக்கைகளுடனும் மலர்கிறது.
அனைத்தையும் ஒரே மூட்டையில் அள்ளி முடிந்திட வேண்டும் என்ற நுகர்வுவெறியும் அது சார்ந்த நமது வாழ்க்கை ஓட்டமும், அந்த நம்பிக்கைப் புலரியைக் காண முடியாமல் செய்யும் கருந்திரையாக மறைத்துக் கொண்டிருக்கின்றன.
அலீ மனிக்ஃபானின் பரிசோதனைகள் நடைமுறைப்படுத்தப்படும் இடத்தில், அந்தக் கருந்திரைகள் கிழித்து எறியப்பட்டுக் கிடக்கின்றன. இயற்கையையும் அதன் வளங்களையும் பணத்தாள்களில் அளவிடும் நமது மதிப்பீட்டு முறைக்குள் அடங்க மறுக்கின்றன.
                                        நன்றி 
                                             தி இந்து 

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் காக்க யோசனைகள்

ஒரு கதை உண்டு. ஒரு தம்பதி புதிதாக ஒரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்த மனைவி, "பக்கத்து வீட்டுக்காரிக்குத் துணிகளைச் சரியாகத் துவைக்கத் தெரியவில்லை. அழுக்கைச் சரியாக நீக்காமலேயே துவைத்திருக்கிறாள்’’ என்றாள். தினமும் அவள் இப்படி அடுத்த வீட்டில் உலரும் துணியைப் பார்ப்பதும், இப்படி விமர்சனம் செய்வதுமாகச் சில நாட்கள் கழிந்தன.
பிறகு ஒரு நாள் வழக்கம் போல, பக்கத்து வீட்டில் காயப் போட்டிருந்த துணிகளைப் பார்த்த அந்த இளம் மனைவிக்குப் பெரும் வியப்பு. “அ டடா, இன்று அந்தத் துணிகள் ரொம்ப சுத்தமாக இருக்கின்றன. இப்போதுதான் அவள் துவைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறாள்’’ என்றாள். அதற்கு அவள் கணவன் சொன்னது இதுதான்: “இன்று காலை முதன்முறையாக நம் வீட்டு ஜன்னலைத் துடைத்துச் சுத்தப்படுத்தினேன்’’.
பிறரை விமர்சிப்பதற்கு முன்னால், நம்மைப் பற்றி யோசிப்பது நல்லது என்பதை உணர்த்தும் கதை இது. அடுத்து நாம் பேசப் போகும் விஷயங்களுக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பிருக்கிறது. மின்சாரச் சேமிப்புக்கும் இந்தக் கதைக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும்?
பகலில் டியூப்லைட்?
பலரும் பகலில்கூட வீட்டுக்குள் ஓரிரு அறைகளிலாவது டியூப்லைட்டைப் போட்டு வைப்பது உண்டு. வெளியே சூரியன் சுள்ளென்று காய்ந்துகொண்டிருக்கும். கேட்டால் “அறைக்குள் போதிய வெளிச்சம் இல்லையே. என்ன செய்வது?’’ என்பார்கள்.
வீட்டைக் கட்டும்போதே எல்லா அறைகளிலும் சூரிய ஒளி நுழையும் விதத்தில் கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். போதுமான அளவு ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறிக் கட்டணத்தையும் குறைக்க முடியும், தென்றல் காற்றையும் சுகமாக அனுபவிக்க முடியும். ஏற்கெனவே கட்டிய கட்டடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் பாயும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். கட்டட இன்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஜன்னல் சுத்தம்
ஜன்னல் கண்ணாடிகளின்மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்துச் சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசிப் படலம் தடுக்கும்.
அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்தப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ணக் கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும். மாலை 5.00 மணிக்கே விளக்குகளைப் போட வேண்டிய நிலையை, இது தவிர்க்கும்.
எந்தப் பெயின்ட்?
பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
அழுத்தமான வண்ணங்களைச் சுவர்களுக்கு அடித்தால், தங்கள் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்பே போதுமானதாக இருக்கும்.
மின்விசிறிகள்
மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தைக் குறைத்தால், மின்சாரம் குறைவாகச் செலவாகுமா என்பதுதான். முன்பு புழக்கத்தில் அதிகமாக இருந்த ரெகுலேட்டர்களைப் பயன்படுத்தினால் (1,2,3,4,5, ON/OFF என்று எழுதப்பட்டிருக்குமே அந்த வகை) மின்விசிறியை எவ்வளவு வேகமாகச் சுழலவிட்டாலும், ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியும். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எலெக்ட்ரீஷியன் ஒருவர் தந்த தகவல் இது. எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மட்டுமே மின்விசிறியைச் சுழலவிடுவோம்.
நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும். ஓர் அறைக்குள் நுழையும்போதே அங்குள்ள லைட், ஃபேன் ஆகிய இரண்டு சுவிட்சுகளையுமே ஆன் செய்யும் வழக்கம் பலருக்கு உண்டு. இதைத் தவிர்க்க வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்கும்போது, மின்விசிறி எதற்காகச் சுற்ற வேண்டும்? தவிர ஏ.சி. வேலை செய்யும்போது, மின்விசிறி அவசியமா?
அறையை விட்டு வெளியேறும்போது மின் சாதனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என்பதில் கட்டாயம் கவனம் செலுத்துங்கள்.
தேவை கவனம்
எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தைச் செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.
வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சி.எஃப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தைச் செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
சி.எஃப்.எல் விளக்கைவிட மின்விசிறிக்குக் கொஞ்சம் அதிக மின்சாரம் தேவைப்படும். டி.வி. செட்டுக்கு இன்னும் அதிகம். ஃபிரிட்ஜ் மேலும் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். ஏ.சி., கீஸர் ஆகியவற்றுக்கு உச்சகட்ட மின்சாரம் அவசியம்.
அறைக்கு ஏற்ற ஏ.சி. மாடலைத் தேர்ந்தெடுங்கள். தானாக டீஃப்ராஸ்ட் ஆகும் ஃபிரிட்ஜ்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படும். அடிக்கடி ஃபிரிட்ஜின் கதவைத் திறந்து மூடுவதால், வெப்பக் காற்று உள்ளே நுழையும். பொருள்களைக் குளிர்நிலையில் வைத்திருக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.
கூடுதல் புரிதலுக்கு...
மின்சாதனங்களை வாங்கும்போது அவற்றைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு சிறு கையேட்டைக் கொடுப்பார்கள். பலரும் அதைப் பிரித்துப் பார்ப்பதுகூட இல்லை. அந்த வழிமுறைகளின்படி பராமரிக்கப்பட்டால், மின் செலவை நிறைய குறைக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் மின் இணைப்பு நன்றாக இருக்க வேண்டும். தரமற்ற ஒயர்கள், அல்லது மின் பாகங்கள் போன்றவற்றால் ஆபத்து அதிகம் என்பதுடன், மின் செலவும் அதிகமாக வாய்ப்பு உண்டு.
வீட்டிலுள்ள எல்லா மின் சுவிட்சுகளையும் ஆஃப் செய்துவிட்டு மின்சார மீட்டரைக் கொஞ்ச நேரம் கவனியுங்கள். அதிலுள்ள சக்கரம் அப்போதும் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தால், வீட்டில் எங்கோ மின்சாரம் கசிகிறது என்று அர்த்தம். அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பக்கத்துப் போர்ஷன்காரரோ, பக்கத்து வீட்டுக்காரரோ உங்கள் மின் இணைப்பிலிருந்து தன் வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம். கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.
இப்படி வீட்டைக் கட்டும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், வீட்டில் குடிபுகுந்த பின்பு கூடுதலாகச் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் மின்சாரத்தைச் சேமித்து நாட்டுக்கு உதவலாம். மின் கட்டணத்தைக் குறைத்து நம்முடைய பட்ஜெட்டையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
                                         நன்றி 
                                        தி இந்து   

Monday, April 28, 2014

சூழலியல் மாசு: வேதி நச்சுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியுமா?



நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாய்மார்களின் உடல்கள், ஏற்கெனவே வேதிக் குப்பைக்கூடைகளாகிவிட்டன. தாயின் உடலை அடைந்த வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாய் சுமக்கும் கருவையும் சென்று சேர்கின்றன. இந்த நிலையில் நம் தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போதே உடலில் தங்கிய நஞ்சுடனே அவர்கள் பிறக்கிறார்கள். தாயின் தொப்புள்கொடி, தாய் வயிற்றில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடம் போன்றவை வேதி நஞ்சுகளால் நிறைந்துள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
தொழில்மயமாக்கத்தாலும் நுகர்வு கலாச்சாரத்தாலும் சூழல் சீர்கேடு அடைந்துள்ள நகர்ப்புறங்களில் பிறக்கும் குழந்தைகள் கிராமப்புறக் குழந்தைகளைவிட அதிகமான வேதித் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்று நகர்ப்புறக் குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிப்பு, ஆட்டிசம், பலவகைக் கற்றல் குறைபாடுகள் போன்றவை பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழலில் இருந்தும் தாயின் உடலில் இருந்தும் இக்குழந்தைகளை அடையும் தொழிற்சாலை மாசுகள், இப்பிரச்சினைகளுக்குக் கூடுதல் காரணமாக இருக்குமா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு
நெதர்லாந்தில் கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பும், உலகளாவிய இயற்கை நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) பிரிட்டன் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் கடுமையானது என்பது தெரியவந்துள்ளது. ‘வாழ்க்கைக்கு ஓர் அன்பளிப்பு’ என்ற பெயரில் 2005-ல் வெளிவந்த அந்த அறிக்கை, இப்படிப்பட்ட வேதிப்பொருட்களின் உற்பத்தியையும் விற்பனையையும் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேற்கண்ட ஆய்வில் 35 வேதிப் பொருட்கள் பட்டியலிடப்பட்டு, இதில் எத்தனை வேதிப்பொருட்கள் தொப்புள்கொடி ரத்தத்தில் உள்ளன என்று பரிசோதிக்கப்பட்டது. அனைத்துத் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளிலும் குறைந்தபட்சம் 5 முதல் 14 வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவற்றில் டெஃப்லான் போன்ற ஒட்டாத வேதிப்பொருட்கள், தீ தடுப்பான்கள், நறுமண வேதிப்பொருள்கள், பால்நிலையை பிறழ்த்தும் வேதிப்பொருட்கள். அழகுசாதனப் பொருட்களில் பயன்படும் வேதிப்பொருட்கள், நெகிழி வேதிகள், நீர்புகாப் பூச்சுக்குப் பயன்படும் வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும்.
அச்சுறுத்தும் வேதிமாசுகள்
மேற்கண்ட வேதிப்பொருட்களில் நச்சுத்தன்மை உடைய ஆல்கைல் ஃபீனால்கள், டிரைகுளோசான், செயற்கை கஸ்தூரிகள், பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள், தாலேட்டுகள், டி.டி.ட்டி போன்ற சேர்மங்களும் அடங்கும். நாம் பயன்படுத்தும் நெகிழிகள், டிடர்ஜென்டுகள், தூய்மைப்படுத்தும் பொருட்கள், வேளாண் களைக்கொல்லிகள், பற்பசை, குளியல் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், துணிகள், பொம்மைகள், வினைல் தரை, மின் கேபிள்கள் போன்றவற்றின் தயாரிப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றை நாம் பயன்படுத்துவதன் மூலம், அவற்றிலுள்ள நச்சுகள் நம்மை வந்தடைகின்றன.
இவற்றில் ஆல்கைல் ஃபீனால்கள் பாலியல் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும். டிரைகுளோசான், ‘சூடோமோனஸ் எருஜினோசா’ என்னும் மருந்து, எதிர்ப்புத்தன்மையை உருவாக்கி நோயாளிக்கு மருத்துவமனைத் தொற்றுகளை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கக்கூடியது. செயற்கை கஸ்தூரிகள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை. பெர்ஃபுளோரினேற்ற சேர்மங்கள் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தைப் பாதிக்கக்கூடியவை. தாலேட்டுகள் ஆண் குழந்தைகளில் விந்து பாதிப்பையும், பெண் குழந்தைகளில் முன்கூட்டியே மார்பக வளர்ச்சிப் பிரச்சினையையும் உண்டுபண்ணுகின்றன. டி.டி.ட்டி. புற்று நோயையும், இனப்பெருக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
ஆய்வில்லை, தடையுமில்லை
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயற்கை வேதிப்பொருட்களால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உரத்த குரலுக்குக் கட்டுப் பட்டு, அங்குள்ள அரசுகள் சில ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.
ஆனால், நம் நாட்டில் முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. சுற்றுச்சூழல் இயக்கங்களும் இன்னும் வலுப்பெறவில்லை. பாதிப்புகள் இங்கு மேலும் ஆழமானதாக இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் என ஊகிக்கலாம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் வாழ்வு கவலைக்குரியது தான்.
‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளை இதற்கும் பொருத்திப் பார்த்து எதிர்காலச் சந்ததியினரை வேதிக் குப்பைத்தொட்டிகளாக உருவாக்கும் மாசடைந்த சுற்றுச்சூழல் அமைப்பை மாற்ற, நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.