Wednesday, April 1, 2015

யானை பசிக்குச் சோளப் பொரி- ஏரின்றி அமையாது உலகு


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, இந்த ஆட்சியின் முதல் அறிக்கை. நிதி அமைச்சர் தனது உரையில் மாற்று ஆற்றல் முறைகள், ஊரக மேம்பாடு, உடல்நலம், வேளாண்மை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இருக்கும் என்று கூறினார். ஆனால் உண்மையில் நிதிநிலை அறிக்கையின் ஒதுக்கீடுகள், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளன.
வேளாண் வெளியேற்றம்
இந்த ஆண்டும் நிதி நிலை அறிக்கை உழவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உழவர்களுக்கு வழங்கப்பட உள்ள கடன் தொகை ரூ. 8 லட்சம் கோடியில் இருந்து, ரூ. 8.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது உழவர்களுக்கு நேரடியாகப் பயன்படுவதைவிட, அதாவது பண்ணையத்துக்குப் பயன்படுவதைவிட, வேளாண் வணிகத்துக்கே பயன்பட உள்ளது. களத்தில் கடுமையாக உழைக்கும் உழவர்களுக்கான பங்களிப்பு என ஏதும் இல்லை.
மிகக் குறைவான வட்டியில் கொடுக்கப்படும் கடன் 92 விழுக்காடு வேளாண் வணிகர்களுக்கே செல்கிறது என்ற குற்றச்சாட்டை யாரும் மறுக்க முடியாது. சிறு பாசனத் திட்டங்களுக்காக ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 'யானைப் பசிக்குச் சோளப் பொரி' போல உள்ளது.
ஊரகப் பகுதிகளை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேளாண்மையைவிட்டு வெளியேறுதல் நடைபெற்று வருகிறது. இதைப் பற்றி நிதி அமைச்சகம் அக்கறை கொள்ளவில்லை என்பது புரிகிறது.
உணவு தருவது யார்?
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஊரக நிதி ஒதுக்கீடு குறைவு. கடந்த ஆண்டும் அது அதிகமாக இல்லை. அதாவது, இம்முறை ரூ. 79,526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே கடந்த ஆண்டு ரூ. 83,852 கோடி. ஊரகச் சாலை அமைப்புக்குக் கடந்த ஆண்டைவிட ரூ. 4,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சீர்மை நகரங்கள் (Smart Cities) என்ற திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 7,060 கோடி என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தச் சீர்மை நகரங்கள் திறன்மிகு முறையில் ஆற்றலைச் செலவு செய்து வாழும் மக்களைக் கொண்டதாக இருக்குமாம். பெரும்பான்மையும் எண்ணியல் (Digital) மயப்படுத்தப்படுமாம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இனி 75% பங்களிப்பை இவர்கள் செய்வார்களாம். சரி கொடுக்கட்டும், இவர்களுக்கெல்லாம் உணவைக் கொடுப்பது யார்?
வழக்கம்போல மண்ணைக் கிளறிக்கொண்டும் பட்டினியில் உழன்றுகொண்டும், தற்கொலை முடிவுகளைத் தேடிக்கொண்டும் இருக்கிற நமது உழவர்கள்தான். இவர்கள் வாழ்வதற்கு நமது ஆட்சியாளர்கள் ஏதாவது வழிகாட்டுவார்களா என்று கேட்டால், இவர்களை நிலத்தைவிட்டு வெளியேற்றினால் போதும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
செல்வ வரி குறைப்பு ஏன்?
உழைக்கும் மக்களுக்கும், எளிய மக்களுக்குமான ஒதுக்கீடுகள் ஏறத்தாழ ரூ. 3,000 கோடிவரை குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெரு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைத்தும், செல்வ வரியைக் குறைத்தும் பெருநிறுவனங்களுக்கான வாய்ப்பை வரைமுறையற்று வழங்கியுள்ளனர். இது மட்டும் ரூ. 8,325 கோடி.
இதன் மூலம் பெருமளவு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைக் கூட்ட முடியும் என்று நினைக்கின்றனர். இதுவரை பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கிய வேலைவாய்ப்புகள் என்ன? அவர்களால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர், அவை எவ்வளவு இயற்கை வளங்களைச் சூறையாடி உள்ளன என்பது போன்ற வெள்ளை அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகி இருக்கிறதா?