Thursday, November 14, 2013

நாளைய இந்தியாவின் இன்றைய நிலை!

நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் (0-14 வயது). இவர்களுக்கு சரியான சூழலும் அரவணைப்பும் இருந்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்கும். ஆனால், அவர்களை நசுக்குவதே நம் வழக்கமாகிவிட்டது. ஆணாதிக்க சமுதாயம் என்பதுபோல, இன்று வயது வந்தோர் ஆதிக்க சமுதாயத்தில் பெரும்பான்மை குழந்தைகள் சிக்கித் தவிக்கிறார்கள். 2001-2011ல் இந்திய மக்கள்தொகை 1810 லட்சம் அதிகமாகியுள்ளது. ஆனால், 0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 50.5 லட்சம் குறைந்துள்ளது. அதில் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 20.6 லட்சம். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 29.9 லட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பாகவும் பாகுபாடின்றியும் பிறப்பை ஏற்படுத்துவதற்கே கடின முயற்சி தேவைப்படுகிறது. அதன் பிறகு பாகுபாடின்றி வளரும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவது அடுத்த படி. 1991-2011க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில் நாட்டின் பாலின விகிதம் 927-ல் இருந்து 940 என உயர்ந்துள்ளது.
பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதாகும். இரண்டு பாலாரும் சரிசமமாக இருக்க வேண்டும். அதாவது, பாலின விகிதம் 1000 என்று இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குழந்தைகள் பாலின விகிதம் 945-ல் இருந்து 914 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 2002-04 முதல் 2008-10 வரை பிறப்பில் பாலின விகிதம் 19 புள்ளிகள் குறைந்துள்ளது என்றும் ஒடிஷாவில் 6 புள்ளிகள் குறைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பெரிய மாநிலங்களில் இந்த பாலின விகிதம் உயர்ந்துள்ளது.
12 முதல் 23 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளில் 62% ஆண் குழந்தைகளும் 60% பெண் குழந்தைகளும் அனைத்து வகையான தடுப்பு மருந்துகளையும் பெறுகின்றனர். மீதம் 38% முதல் 40% குழந்தைகள் வரை தடுப்பு மருந்து பெறுவதில்லை. பாலின விகிதம் குறைவதற்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான சூழல் உருவாவதற்கும் இதுவும் ஒரு காரணம்.
கல்வி என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் அவர்களை தொடர்ந்து படிக்கவைத்து, கற்றலை மேம்படுத்தி, பள்ளிப் படிப்பை முடிக்க வைப்பதே அநேக இடங்களில் சிரமமாக உள்ளது. 98% குழந்தைகளை ஆரம்பப் பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்றாலும், ஏழைகள், குடிபெயர்ந்த குழந்தைகள் அதில் விடுபட்டுப்போவதும் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதும் பெரும் சிக்கலாக உள்ளது. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ப்பு விகிதம் வேகமாக குறைவதும் (குறிப்பாக இது பெண்களுக்கு) நம் பெண்களின் மோசமான சமுதாய நிலையைக் காட்டுகிறது.
அடுத்த சவால், குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்து ஆரோக்கியமாக வளர்ப்பது. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவது, வேலைக்கு அமர்த்துவது, கொடுமைப்படுத்துவது என எல்லா வகையான கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றுவது அதைவிட பெரும் சவாலாக இருக்கிறது.
2011-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் 24% அதிகரித்துள்ளன. இதில் குழந்தைகள் கடத்தல் 43%, பெண் குழந்தை பலாத்காரம் 30%, சிசுக்கொலை 20% என விகிதாச்சாரங்கள் நெஞ்சம் பதற வைக்கின்றன.
குழந்தைத் திருமணம் சட்டரீதியாக தடை செய்யப்பட்டாலும், அந்தச் சட்டம் மீறப்படுவது குறைந்தபாடில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுக்குப் பிறகும் குழந்தைகள் நிலை மிக மோசமாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் தினமான இன்று, பெரியவர்களுக்கு குழந்தைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சகோதரர், சகோதரி வரை எல்லோருக்கும் இந்த புரிதல் மிக மிக அவசியம்!

Monday, November 11, 2013

ஆணுக்கு எதிரானதா பெண்ணியம்?


பொதுவெளிகளிலும் ஊடகங்களிலும் பெண்ணியம் பற்றிய விவாதம் நடக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பெண்ணியம் என்றாலே ஆணுக்கு எதிரானது, ஆண்களை அடக்கியாள நினைப்பது அல்லது ஆண்களை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவது என்ற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களிடமும், அவர்களே பெண்களுக்கான கருத்தையும் உருவாக்கும் அதிகாரத்தில் உள்ளதால் பெண்கள் பலரிடமும் உள்ளது. ஆண்களை எதிரிகளாகக் கருதுபவர்களாகவே பெண்ணியவாதிகளைப் பொதுச் சமூகம் அடையாளப்படுத்திவைத்திருக்கிறது.
பெண்ணியம் என்பது என்ன? முதலில் நடைமுறை சார்ந்து அதை அணுகிப் பார்க்கலாம். இன்று ஒரு பெண் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறாள் என்றால், அதில்கூடப் பெண்ணியம் இருக்கிறது. ஏனென்றால் அந்த உரிமைகூடத் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளின் விளைவே.
நடைமுறை வாழ்க்கையில் பேருந்தில் தன்னை உரசிக்கொண்டே வரும் வக்கிர புத்திக்காரனை எதிர்கொள்ளும் நிலையில் அவளுக்குப் பெண்ணியம் உதவிக்கு வருகிறது. இன்றளவும் அவள் நள்ளிரவில் தனியாகச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறதெனில், 'காந்தி தேசத்தில்' பெண்ணுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள்.
அந்த நிலையில் பெண்ணைத் தாயாக, தெய்வமாகப் போற்றுவதான வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளி நிஜத்தை உணரக் கோருகிறது பெண்ணியம். இப்படி அன்றாட யதார்த்தங்கள், புத்தகங்களில் இருக்கும் பெண்ணியத்திற்கான வரையறைகள், சட்டப் புத்தகங்கள் பேசும் சமநீதி ஆகியவற்றைப் புறக்கணிக்கும் அல்லது கேலி செய்யும் நிலை சமூகத்தில் பலரிடம் உள்ளது.
மறுபுறம் அப்பாவின் 'அரவணைப்பில்' வளர்ந்து, அண்ணணின் 'பாசத்தில்' நனைந்து, கணவனின் 'காதலில்' திளைத்து வாழும் பெண்கள் பெண்ணியமே தேவையில்லை என்கின்றனர். இத்தகைய பெண்கள் பெரும்பாலும் நடு்த்தர வர்கத்தினர். இவர்கள் அனைவரும் ஆண்கள் 'கொடுத்த' சுதந்திரத்தைக் கொண்டு நன்றியோடு வாழ்பவர்கள். இவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாதவர்கள். ஆனால் 'அரவணைக்கும்' அப்பாவும், 'பாசம்' பொழியும் சகோதரனும், 'காதல்' கணவனும் எடுத்துக் கொடுக்கப் பெண்ணுரிமை என்பதும் சுதந்திரம் என்பதும் சமத்துவம் என்பதும் சுக்கோ மிளகோ இல்லை என்கிற புரிதலில் முகிழ்ப்பதுதான் பெண்ணியம்.
ஓர் ஆண் சினிமா பார்க்க இரவு நேரக் காட்சிக்குத் தன் நண்பர்களுடன் செல்ல முடியும். ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண்ணால் அது முடியாது. ஓர் இளைஞன் தன் நண்பர்களுடன் வெளியூர் சென்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிட்டு வரலாம். ஆனால், ஓர் இளம் பெண் அவ்வாறு செய்ய முடியாது. வேலை நிமித்தமாகவோ கல்லூரிச் சுற்றுலாவுக்கோ சென்றாலும்கூட அதற்கான பயண அட்டவணை, அவள் உடன் செல்பவர்கள் குறித்த விவரங்கள் ஆகியவை அவளின் பெற்றோர் கையில் இருக்கும். இது என்ன சின்ன விஷயம்தானே என்று புறக்கணித்துவிடலாம். ஆனால் இதில் நுட்பமான உடல் அரசியல் அடங்கியுள்ளது.
ஒரு பெண்ணின் உடலானது குடிப்பெருமை, குலப்பெருமை, சமயம், சமுதாயம் ஆகியவற்றின் பெருமை அனைத்தையும் சுமந்து திரியும் தெய்வீக வஸ்து. அப்படி எல்லாம் எந்தக் கடமையும் ஆணுக்கு விதிக்கப்படவில்லை, அல்லது அந்த விதிக்கு விசுவாசமாக ஒரு ஆண் இருக்கவும் தேவை இல்லை.
சொத்துடமைச் சமுதாயம் தோன்றிய காலத்தில் 'கற்பு எனும் திண்மை' முதன் முதலாக ஆண் வாரிசு முறையை உத்திரவாதப்படுத்த உருவாகி நிலைபெற்றதாகச் சமூக அறிவியல் தெரிவிக்கிறது. தனக்குப் பிறகு தன் சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேருமோ அவர்கள் தன் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளவே பெண்ணுக்குக் கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. அதோடு இன்னொரு விஷயமும் நடந்தது.
திருமணம் செய்துகொண்டு 'வேறு வீட்டுக்கு'ச் சென்றுவிடும் பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது என்ற விதியும் ஏற்படுத்தப்பட்டது. பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கிடையாது. அவள் ஆணின் சொத்து. அவளைப் பணம் கொடுத்து, வாங்கிக் கைமாற்றிக்கொள்லலாம்.
பொருளாதார ரீதியில் குடும்பத்தைக் காக்க ஒர் ஆண் மகன் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பம் தலையெடுத்துவிட்டது என்கிறது சமுதாயம். அதே குடும்பப் பொருளாதார நிலையைச் சமாளிக்க ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அது சமுதாயத்தால் 'பரிதாபத்திற்குரிய' நிலையாகப் பார்க்கப்படுகிறது. சமயத் தலைவர்கள் சிலர் ஒரு படி மேலே போய் 'வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்' என விஷம் கக்குகின்றனர்.
19ஆம் நூற்றாண்டுவரை பெண்கள் கல்வி கற்பதே மிகப் பெரிய விஷயமாக இருந்தது. மகாத்மா ஃபுலே, ராம் மோஹன் ராய், காந்தியடிகள், தந்தை பெரியார் போன்றோரின் செயல்பாடுகளால் இன்று மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன. இன்று ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த மாற்றங்களைப் பலர் எரிச்சலோடும், சிலர் நிறைவோடும் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரமோ ஒளி வேகப் பயணத்தைக் கோருகிறது.
பெண்ணுரிமை பேசும் சில பெண்கள், ஆண்களுக்கும் பொதுச் சமூகத்துக்கும் எதிராக முன்வைக்கும் விமர்சனங்களில் சமநிலை தவறியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெண்ணுரிமைக் கோரிக்கைகளையும் சிறுமைப்படுத்த முயல்வதும் பெண்ணை அடிமைப்படுத்தும் செயலாகவே அமையும்.
பெண்ணுரிமை, பெண்நிலைவாதம், பெண்ணியம் என்பவை அடிப்படையில் சம உரிமைக்கான குரல்கள்தான். இதைப் பெண்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டும் என்பதில்லை. கல்வி, வேலை, லட்சியம், பொழுதுபோக்கு, திருமணம், பாதுகாப்பு, நடமாட்டம் என அனைத்திலும் ஆணுக்குக் கிடைக்கும் உரிமைகளும் சுதந்திரமும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். இது ஆண்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆணுக்கு எதிரானதுமல்ல.
பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து, சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும், பால் சமத்துவத்திற்குப் போராடவும் உதவும் ஒரு வழிகாட்டியே பெண்ணியம். நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய லட்சியம் இது.

வயிற்றுக்குச் சோறிடும் நுட்பம்

உலகில் ஆதி வேளாண்மை 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளது. ஒருவேளை மனித குலம் வேளாண்மையைக் கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால், நாம் உயிர் வாழ்வதற்கு இன்றைக்கும் விலங்குகளை துரத்திச் சென்று வேட்டையாட வேண்டியிருந்திருக்கும்.
ஆதி காலத்தில் மனிதன், உணவு சேகரிப்பவனாகத்தான் இருந்தான். அதில் பெண்களுடைய பங்கே அதிகம் இருந்தது. அதற்குக் காரணம், தன் சந்ததியைப் பெருக்கவும், அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கவும் வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்ததுதான். மனிதகுலம் வேட்டையாடக் கற்றுக்கொண்ட பிறகு, பெண்களே தொடக்கத்தில் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பிந்தைய காலத்தில்தான் ஆண்கள் வேட்டையில் முக்கியப் பங்கைப் பெற்றனர்.
உண்மையில் வேட்டையாடுதலும் உணவுச் சேகரித்தலும் காட்டிலிருந்த நடைமுறைகளை மீறாமல் இருந்ததால், அவை பெரிய பின்விளைவுகளை உருவாக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வாழிடத்தில் கிடைத்த இயற்கைஆதாரங்களை நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை, மனிதகுலத்திடம் மரபுவழியாக தொடர்ந்து வந்தது.
அதேநேரம் அவற்றில் இருந்த கட்டுப்பாடு என்னவென்றால், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வேட்டையாடவோ, உணவுதேடவோ முடியவில்லை. அதனால் மனித குலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டேயும், சிறிய குழுவாகவும் வாழ வேண்டியிருந்தது.
உணவு சேகரிப்பு விவசாயமாகவும், வேட்டையாடுதல் விலங்கு வளர்ப்பாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்தன. காட்டில் தாவர உணவுப் பொருட்களை அவ்வளவு காலம் சேகரித்து வந்த பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். எனவே, ஆதி விவசாயிகள், பெண்களே. மனித சமூகத்தில் நீர்ப்பாசன வேளாண் முறை உருவாவதற்கு முன்பு வரை பெண்களே பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்கள்.
“வேளாண்மை கண்டுபிடிக்கப்பட்டது மனித சமூகத்தில் நிகழ்ந்த இரண்டாவது கட்ட புரட்சியாகக் கருதப்படுகிறது” என்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி. வேளாண்மை மூலம் இயற்கை ஆதாரத்தை திறன்மிக்க வகையில் மனிதகுலம் பயன்படுத்த ஆரம்பித்ததால்தான், தான் சார்ந்துள்ள சூழலியல் தொகுதியை (Ecosystem) தொடர்ச்சியாக அழிப்பதை நிறுத்த முடிந்தது. ஆனால், அது எல்லா நிலைகளிலும் நடக்கவில்லை.
வேளாண்மை தொடங்கிய காலத்திலும் மனிதகுலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. அப்போது அதன் பெயர் காட்டெரிப்பு வேளாண்மை. குறிப்பிட்ட ஓரிடத்தில் காட்டை அழித்து, அங்கு வேளாண்மை செய்யப்படும். அந்த நிலத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தீர்ந்தவுடன், வேறொரு நிலப்பகுதியை தேடிச் செல்ல வேண்டும். இதுவே காட்டெரிப்பு வேளாண்மை.
தமிழகத்தில் இதுபோன்ற காட்டெரிப்பு வேளாண்மை, சங்ககாலத்துக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. காட்டை எரித்து உருவாக்கப்பட்ட நிலம், புனம் எனப்பட்டது. இருளர், குறும்பர், மலையாளிப் பழங்குடிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டெரிப்பு வேளாண்மையை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டம் மூலமே, அது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இன்றைய நவீன உணவுப்பொருள்களை மரபணுப் பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, அடிப்படைப் பயிர்களாகக் கருதப்படும் கோதுமை, பார்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவை தென்மேற்கு ஆசியாவில் 9,000-10,000 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
தமிழகத்தில் மரபாகப் பயிரிடப்பட்டு வரும் தினை, சாமை போன்ற சிறுதானியப் பயிர்கள் 7000-10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றன. நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை தென்னிந்தியா தொடங்கி மத்திய இந்தியா வரை புதிய கற்காலத்திலேயே (கி.மு. 4,500-2,000) இருந்துள்ளன. உலக வரலாற்றில் மனிதர்களின் வாழ்க்கை இப்படி இடம்பெயர்ந்துகொண்டே இருந்த நிலையில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ வழிவகுத்ததும் வேளாண்மைதான். மனித குலம் நதிக்கரைகளில் வேளாண்மை செய்யப் பழகிக் கொண்டது, நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. நதிக்கரை நாகரிகங்கள் உலகைத் திருப்பிப் போட்டன.
இப்படியாக வேளாண்மை என்பது தனித்த கண்டுபிடிப்பாக இல்லை. தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்ப கண்டறிதல்களுக்கு அது வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக பாசனமுறை வளர்ச்சி, பயிற்சிசுழற்சி முறை, பயிர் ஊட்டத்தை அதிகரிக்க உரமிடுதல் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செம்மைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டன. மனிதகுலம் காட்டுத் தாவரங்களில் இருந்து விதைகளைச் சேகரித்து, அவற்றை பயிரிட்டு, வளர்த்து, அறுவடை செய்த ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்ட கண்டறிதல்கள் ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
வேளாண்மையில் தொடங்கி, இன்றைக்கு எத்தனையோ புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பிறகும்கூட, மனிதகுலம் இயற்கை வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டே இருப்பதுதான் இதில் மிகப் பெரிய முரண்பாடு.

Sunday, November 10, 2013

தெய் வராஜ்

மனநலம் பாதித்த பெண்ணுக்கு முடி வெட்டும்தெய் வராஜ் (இடது) மற்றும் நண்பர்கள்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         காலை நேரம். திருப்பூர் - கோவை சாலையில் கடிகாரத்தையும் போக்குவரத்து சிக்னலையும் கவனித்தபடி வாகனத்தை முறுக்கிப் பறக்கிறார்கள் மக்கள். தனது சலூன் கடையை திறக்கவந்த தெய்வராஜ் மட்டும் சாலையில் சுருண்டு கிடக்கும் பெரியவரைப் பார்த்துவிட்டு பதறிப்போய் தூக்குகிறார்.
அவரை அள்ளி எடுத்து முகம் கழுவிவிட்டுக் கொண்டே மனைவி சிவகாமியை அலைபேசியில் அழைக்கிறார். சற்று நேரத்தில் ஆடைகள், உணவு சகிதம் அங்கே வருகிறார் சிவகாமி. இருவரும் பெரியவருக்கு உடை மாற்றி, சாப்பிடவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அந்தப் பெரியவருக்கும் தெய்வராஜுக்கும் என்ன உறவு? கண்கள் பார்த்தும் இதயம் இரங்காமலும் கடந்து சென்றவர்கள் பலர் இருக்க.. இவருக்கு மட்டும் ஏன் அக்கறை? அவரையே கேட்கலாம்..
‘‘நாங்க கரூர் மாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு பிழைக்க வந்தவங்க. வந்த புதுசுல, முடிதிருத்தும் தொழிலில் சராசரியா தினம் முப்பது ரூபாய் சம்பாதிப்பேன். இப்ப சொந்தமா கடை வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்டேன். எனக்கு தொழில் பகுதி நேரம்தான். வறுமையின் வலி எனக்கும் தெரியும். அதனால, வறுமைப்பட்ட சனங்களுக்கு நம்மாள முடிஞ்ச ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன்.
பெரிய அளவுல யாருக்கும் உதவமுடியாது. அதனால, இந்த சமூகத்தால் கசக்கி வீசப்பட்ட மனநலம் பாதித்த ஜீவன்களை தேடிப்போய் சேவை செய்ய ஆரம்பிச்சேன். ஊர் ஊராகச் சென்று மனநலம் பாதித்தவர்களை தேடிப்பிடித்து அவங்களுக்கு முடிதிருத்தம் செய்து விடுவேன். அந்த நேரத்தில கையில் இருக்கிற காசைப் பொருத்து அவங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிக் குடுத்துட்டு கெளம்பிருவேன்.
திருப்பூர் ஏரியாவுல, அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு நாப்பது நாளைக்கு ஒருமுறை இலவசமா முடிதிருத்தம் செய்துவிடுறேன். இடையில, இதுமாதிரி ஆதரவற்ற ஜீவன்கள் ரோட்டோரம் விழுந்து கிடந்தா அவங்களயும் தூக்கி எடுத்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் சேர்த்துட்டு வருவேன். என்னால முடிஞ்ச இந்த சின்ன சேவைய கடந்த 12 வருஷமா செய்துட்டு வரேன்..’’ அடக்கமாக சொன்னார் தெய்வராஜ்.
கோவை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு பல மாவட்டங்களைச் சுற்றி வந்திருக்கும் தெய்வராஜ், இதுவரை இப்படி பத்தாயிரம் தெய்வக் குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்திருக்கிறாராம் - இலவச சேவையாக!
‘‘சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவங்க மேல எப்பவும் தனி கவனம் செலுத்துவேன். இவங்கதான் உறவுகள் இருந்தும் இல்லாமல் இருப்பவர்கள். மாசத்தில் நான்கு நாள் ஒதுக்கி ஒவ்வொரு மாவட்டமா கிளம்பிப் போய் மனநலம் பாதித்தவங்கள கண்டுபிடிச்சு முடிதிருத்தம் பண்றேன். என் சேவையை பார்த்துட்டு நண்பர்கள் 15 பேர் என்கூட கைகோத்துட்டாங்க.
சிலருக்கு இது சாதாரணமா தெரியலாம். கத்தரிக்கோல் உள்ளிட்ட சாமான்களை வைச்சுக்கிட்டு, மனநலம் பாத்தித்தவங்கள அத்தனை சுலபமா நெருங்க முடியாது. அவங்கள தாஜாபண்ணி வேலையை முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும். பல இடங்கள்ல அடிகூட வாங்கிருக்கோம்.
மாவட்டவாரியா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆதரவற்ற தொழுநோயாளிகளுக்கும் அவ்வப்போது முடிதிருத்தம் செஞ்சு விடுவோம். இந்தச் சேவைக்காக யாரிடமும் நாங்க கைநீட்டி காசு வாங்குவதில்லை. எங்க சம்பளத்துல ஒரு பகுதியைத்தான் செலவு செய்கிறோம்’’ என்கிறார் தெய்வராஜ்.