Friday, November 22, 2013

உடலைக் காக்கும் கொழுப்பு


கொழுப்பு என்றாலே உடலுக்குத் தீமையைத் தருவது என்றொரு எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒமேகா-3 என்றொரு கொழுப்புவகை பலவகையான நோய்களில் இருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது என்கிற உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

omega_3நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6 வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில் காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.

ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?

தகவல்: மு.குருமூர்த்தி

No comments:

Post a Comment