Thursday, January 9, 2014

"தலைப் பொங்கல்' சீரும், சிறப்புமாய்!

"வீட்டை கட்டிப்பார், திருமணத்தை முடித்து பார், ' என்பதெல்லாம் அன்று. "திருமணத்தை முடித்து பார், அதன் பின் வரும் சங்கடங்களை எண்ணிப்பார் ,' என்கிறது, "மாடர்ன்' உலகம். திருமணம்- அது இருவீட்டாருக்கும் பொதுவானது என்றாலும், பெண் வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே ஆர்ப்பரிப்பார்கள்.
கல்யாண சீர் வரிசையுடன் நிற்பதில்லை, பெண் வீட்டாரின் செய்முறை படலம். "தலைத் தீபாவளி, தலைப்பொங்கல்,' என, அடுத்தடுத்த செலவுகள் வந்தாலும், தன் பெண்ணின் மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு, சளைக்காமல் செய்முறை செய்வது, நம்மூர் கலாசாரம். தலைத் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் நிறையவே வித்தியாசம். ஒரு மாதத்திற்கு முன்பே, பொங்கல் சீர் ஏற்பாடுகள் தொடங்கிவிடும். காரணம், அதில் பாத்திரங்கள் அதிக இடம் பிடிக்கும். திருமணத்தை விட, தலை பொங்கல் "சீர்' தரும் போது தான், நிறைய பாத்திரங்கள் தரப்படுகிறது.
பொங்கல் பானையாக, பித்தளை, சில்வர், வெண்கலத்தில், மூன்று வித பானை தரப்படுகிறது. "பொங்கல் படி' எனப்படும், அரிசி, வெல்லம், கரும்பு போன்றவையும், வசதி படைத்தவர்கள், பருப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கின்றனர்.
"ஏதோ... எடுத்தோம்... கவிழ்த்தோம்...' என, கையில் நீட்டி விட முடியாது, இந்த சீர்வரிசையை. உறவினர்கள் சகிதம் கிளம்பி, முறைப்படி மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டிய மரபு, பொங்கல் சீருக்கு உண்டு. சீர் வரிசைக்கு ஏற்ப, வரவேற்பும், விருந்தும் படைப்பது, மாப்பிள்ளை வீட்டாரின் சம்பிரதாயம். சீர் அதிகம் இருந்தால், உறவினர்களிடம் பெருமை அடிப்பதும், குறைந்திருந்தால் நேருக்கு நேர் வசைபாடுவதையும், சில மாப்பிள்ளை வீட்டார், இன்றும் தொடர்கின்றனர்.
தலைத்தீபாவளியை, பெண் வீட்டில் கொண்டாடினாலும், பொங்கல் பொங்குவது என்னவோ, மாப்பிள்ளை வீட்டில் தான். "வண்ணம் தீட்டிய படிக்கட்டில் அமர்ந்து, அழகான மனைவியின் தோளில் உரசியபடி, வாசலில் வரைந்த கோலத்தை ரசித்துக் கொண்டே, கரும்பு கடிக்கும் சுகம் இருக்கே...' அந்த ஒரு நொடியில், தன் தந்தையின் சீர் வரிசை சிரமங்களை எல்லாம் மறந்து
விடுவாள் மனைவி.
தாய் வீட்டுச் சீதன பானையில், பொங்கல் பொங்கும் போது, மனைவி ஆனந்த கண்ணீர் வடிக்கும் அந்தத் தருணத்திலிருந்து அவளை மீட்பது, குலவை சத்தம் மட்டுமே. அத்தனை சீர் வரிசை செய்தாலும், பொங்கல் பண்டிகைக்கு, மாமனார், மாமியாருக்கு அழைப்பு கிடையாது. தன் குடும்பத்தாருடன், தன் மனைவி சகிதமாய் புதுமாப்பிள்ளை, தலைப் பொங்கல் கொண்டாடுகிறார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், பொங்கல் "சீர்' படிப்படியாக குறைந்து, உறவுகள் "சீரில்லாமல்' போகும் கதைகளும் நடப்பதுண்டு. இருந்தாலும், தலைப் பொங்கல் "சீர்', நிச்சயம் மறக்கமுடியாது. மாஜி மணமகன்களே, உங்கள் தலைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு திரும்பிவிட்டீர்களா?
நிச்சயம் இனிக்கும், பொங்கல் மட்டுமல்ல, அந்த நினைவுகளும் தான்.
-சுப்பு

No comments:

Post a Comment