அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில்.
அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி
சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல்
கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக்
கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும்
கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.
வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில்
இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை
வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்’களிலிருந்து பெரிய
ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது
போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய்
அதன் குமிழை திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும்.
அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க
வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச் சுழலவிடுவது வழக்கம்.
அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக்
கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த
ஃபேன் சுவிட்சைப் போட்டு விட்றா’ என்றாள் அக்கா. வேக மாக
ஏறிப்போட்டுவிட்டேன்.
அப்போது பார்த்து எங்கி ருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற் குள் பறந்து
வந்தது. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த
குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென
விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன்.
ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப் போடவே
கூடாது, என்றாள். வெள்ளைப்பூண்டு போட்டு வைக்கும் கூடையிலிருந்த பூண்டுகளை
கொட்டிவிட்டு குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி
மூடினாள்.
பின்னர், மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் வழியாக
அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள்.
சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து
கிடந்தது. கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில்
வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது
படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து
பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.
இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து
மரப்பலகையில் இருந்த ஆணி யில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது
காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். அதன்
உடலிலும் இறக்கை யிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில்
மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது
நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும்.
‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம்
எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல் லாம் அடைச்சி
வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன். அப்புறம்?
‘சரியானவொடனே கதவைத் திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.
நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு
தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில்
போய் ஒண்டிக்கொள்ளும். பள்ளிக்
கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப்
போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த
போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம்
சென்றேன் இதைத் தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவி
தானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச் சில்ல’
என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.
அவ்வப்போது பக்கத்திலி ருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று
பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்தி லிருந்து
என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.
http://chinnappayal.blogspot.com/2014/01/blog-post_26.html
Keywords:
No comments:
Post a Comment